புதுடெல்லி, டிச. 4:
டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.1 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.6 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதனிடையே இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 4ம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராகவும் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
![]()





