செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே? ஸ்டாலின் கேள்வி

Makkal Kural Official

சென்னை, செப். 23–

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாமே என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீர்திருத்தம் நாடு முழுவதும் நேற்று அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள், டி.வி, ஏசி, கார்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை என சுமாா் 375 பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

சரிபாதி மாநில அரசு பங்கு

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே? மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

மற்றொரு புறம், மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

இந்தியா எப்படி

வளர்ச்சி அடையும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *