செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

Makkal Kural Official

மதுரை, செப். 4–

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு, இது போன்ற பல்வேறு வரிவிகிதங்களை வைக்காதீர்கள் என்று அப்போதே நாங்கள் அறிவுறுத்தினோம்.

அப்போதைய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியமும் இது தவறு என்று அறிவுறுத்தினார். ஆனால் அன்று பிரதமரோ, நிதி அமைச்சரோ மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். பல பொருளாதார நிபுணர்கள் இது தவறு, இதை திருத்த வேண்டும் என்று கூறினார்கள்.

இப்போதாவது இது தவறு என்று உணர்ந்து இதை திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கி பிழிந்தார். இப்போது வரியை குறைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இதே மக்கள் தானே அதே 18% வரியை கட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த 5% வரி பொருந்தும் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகள் அது பொருந்தவில்லை? மக்களிடம் இருந்த பணத்தை எல்லாம் வரியாக வசூலித்து இப்போதாவது அவர்களுடைய மனம் திருந்தி, அறிவு தெளிந்து தங்களுடைய தவறை திருத்திக் கொண்டதற்கு பாராட்டுகிறேன்”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *