கடலூர், டிச. 24–
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தொழில் மையம், கடலூர், முன்னோடி வங்கி மற்றும் இதர வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் தொழிற் கடன் வழங்கும் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 63 நபர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் மாவட்டத் தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கிகள் ஒருங்கிணைந்து மாபெரும் தொழிற் கடன் வழங்குதல் முகாம் மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமினை இன்றைய தினம் நடத்தியது.
இக்கூட்டத்தின் நோக்கமானது வங்கிகள் குறிப்பாக சுயதொழில் புரிவோர் அரசு திட்டங்களின் கீழ் எளிதாகக் கடன் பெற செய்வதற்கான ஒரு முயற்சி ஆகும். கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்களுக்கு கடன் ஒப்பளிப்புக் கடிதங்கள் வழங்குவதும், நிலுவை விண்ணப்பங்களைக் குறைப்பதே இம்முகாமின் நோக்கமாகும்.
தொழில் முனைவோர்கள் வங்கிகளை எப்படி அனுகவேண்டும் எனவும், கடன் குறியீட்டு எண் உயர்த்தும் முறை குறித்தும், மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு விதமான திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வித் தகுதியோ, வருமான வரம்போ ஏதும் இல்லை. 18 முதல் 55 வயதுக்குட்பட்ட மகளிர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தீபா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்டத்தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





