செய்திகள்

6வது நாளாக சிகிச்சை: இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே ஸ்டாலின் அரசுப் பணி

Makkal Kural Official

சென்னை, ஜூலை 26–

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணியை செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலமைச்சர் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் முதலமைச்சருக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அறிவுறுத்தியதன்பேரில் முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வந்தார். மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இன்றுடன் 6வது நாளாக முதலமைச்சருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் அரசு பணிகளை தொடங்கினார். அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை இன்று கனிமொழி எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், மு.க.அழகிரி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *