செய்திகள்

50 சேவைகளுக்காக ‘மெட்டா’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Makkal Kural Official

மின்சாரம் – குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்* மாநகராட்சி வரிகளை கட்டலாம்; மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்:


பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து


சென்னை, ஆக 15–

தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. முதல் கட்டத்தில் பயன்பாட்டு கட்டண செலுத்துதல் உட்பட 50 குடிமக்கள் சேவைகள் வழங்கப்படும்.மக்கள், புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை, ஒரே சாட் விண்டோவில் செய்ய முடியும். இதனால், அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கின்றன; சேவை மையங்களுக்கு பல முறை செல்வதற்கான தேவையும் நீங்குகிறது.

குடிமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் திறனை மேம்படுத்துதலில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் டாக்டர். பழனிவேல் தியாக ராஜன் மற்றும் அரசின் முதன்மை செயலர் பிரஜேந்திர நவ்னித், ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் மெட்டா இந்தியா டைரக்டர் ரவி கார்க் ஆகியோர் வாட்ஸ்ஆப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஒரே தொலைபேசி எண் மூலம் அணுகக்கூடிய வகையில், சாட்பாட்டின் முதல் கட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் அணுக முடியும்.

இந்த சாட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்த இயலும், அதிகபட்ச அணுகுதலை உறுதி செய்ய உரை (text) வடிவில் சேவைகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கூறுகையில், “ஆட்சியை மக்கள் மையமாக்கவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் நிற்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் தெளிவான நோக்கம். மெட்டாவுடனான இந்த கூட்டாண்மை அந்த பயணத்தில் ஒரு தீர்க்கமான அடியாகும். மின்-ஆட்சிக்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை வாட்ஸ்ஆப்பின் எளிமை மற்றும் அணுகல்தன்மையுடன் இணைப்பதன் மூலம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தொழில்நுட்பம் மிகவும் எளிமையான வழியில் வேலை செய்வதை உறுதி செய்து, மக்கள் குடிமக்கள் சேவைகளை அணுகும் விதத்தையே மறுவரையறை செய்கிறோம்” என்றார்.

மெட்டா’ நிறுவனம் மகிழ்ச்சி

மெட்டா இந்தியா டைரக்டர் ரவி கார்க் கூறுகையில், “வாட்ஸ்ஆப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு தளமாகும், அதன் எளிமை மற்றும் பயன்பாட்டின் எளிமை அரசு சேவைகளுக்கு டிஜிட்டல் அணுகலை வழங்குவதற்கான சிறந்த தளமாக அமைகிறது. குடிமக்கள் அரசு சேவைகளை பெறும் விதத்தை மாற்றியமைக்கும். தமிழ்நாடு அரசின் முயற்சியில், அவற்றை மிகவும் வசதியானதாகவும், திறனுள்ளதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *