செய்திகள்

3 ஆயிரம் கோடி கடன் மோசடி : அமுலாக்கத் துறை பிடியில் சிக்கிய அனில் அம்பானி

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 24–

கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், ‘‘மோசடியாளர்’’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை. இதுதொடர்பாகவும், வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த அமலாக்க துறை குழுவினர் மும்பைக்கு வந்திறங்கி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

(எனினும், இந்த சோதனை பற்றி அமலாக்க துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.)

சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையிலும், இரண்டு வங்கிகள் கொடுத்திருக்கும் புகாரின் பேரிலும், செபி உள்ளிட்ட சில அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அனில் அம்பானிக்குத் தொடர்புடைய மும்பை, புதுடெல்லியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடன் மோசடியாளர் என அறிவிக்கக் காரணமாக இருந்தது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஒரு சில வங்கிகளிடமிருந்து கூட்டாக ரூ.31,580 கோடி கடன்களைப் பெற்றுள்ளன. எஸ்பிஐ வங்கியின் மோசடி கண்டறியும் குழு அளித்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்கிய மொத்த கடனில் 44 சதவீதமான ரூ.13,667.73 கோடி ஏற்கெனவே வாங்கிய கடன் நிலுவையை திரும்ப செலுத்தப் பயன்படுத்தியுள்ளது.

சுமாா் 41 சதவீத கடனான ரூ.12,692.31 கோடி, துணை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றப்பட்ட கடன்தொகை ரூ.41,863.32 கோடியாக உள்ள நிலையில், அதில் ரூ.28,421.61 கோடியின் பயன்பாட்டைகண்டறிவதற்கு மட்டுமே தரவுகள் உள்ளன.

ரிசர்வ் வங்கியிடம்

எஸ்பிஐ புகார்

இந்த நிலையில் தான், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில், எஸ்பிஐ வங்கியானது புகாரளிக்க முடிவெடுத்திருக்கிறது.

அனில் அம்பானிக்குச் சொந்தமாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் தீா்வு செயல்முறை (சிஐஆா்பி) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .இவ்வாறு கடன் மோசடி என வகைப்படுத்தப்பட்ட கணக்குதாரா்கள், கடனாகப் பெற்று மோசடி செய்யப்பட்ட தொகையாக மதிப்பிடப்பட்டிருக்கும் தொகையை முழுமையாக வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்திய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்கப்படும்.

இந்தத் தடைக்குப் பிறகு இவா்களுக்கு கடன் வழங்குவது குறித்து அந்தந்த வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவா்களின் கடன் கணக்குகளுக்கு மறுசீரைமைப்பு, கூடுதல் கடன் போன்ற எந்த வசதிகளும் அனுமதிக்கப்படாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *