செய்திகள்

28 புதிய மெட்ரோ ரெயில்கள் வாங்க சென்னை மெட்ரோ நிறுவனம் டெண்டர்

Makkal Kural Official

சென்னை, நவ. 23:

6 பெட்டிகளுடன் இயங்கும் வகையில், 28 புதிய மெட்ரோ ரெயில்கள் கொள்முதல் செய்ய, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தினமும் சராசரியாக 3.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணியரின் கோரிக்கையை ஏற்று, ஆறு பெட்டிகளாக இணைத்து இயக்குவதற்கான ஆரம்ப கட்ட பணியை, மெட்ரோ ரெயில் நிறுவனம் துவக்கி உள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரெயில்களில், பயணியர் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரெயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் அதிகமாக பயணியர் வந்து விடுகின்றனர். தற்போதுள்ள நான்கு பெட்டிகள் போதுமானதாக இல்லை. இதற்கிடையே, முதல் முறையாக ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகளை துவக்கி உள்ளோம். தற்போதுள்ள, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், போதிய அளவில் நடைமேடை வசதி இருப்பதால், விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டியதில்லை.

முதற்கட்டமாக, 28 புதிய மெட்ரோ ரெயில்கள், 2000 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்து, டெண்டரும் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரெயில்கள் படிப்படியாக கொண்டுவரப்பட்டு, சேவையில் இணைக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்த மெட்ரோ ரயில்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதனால், பயணியர் மெட்ரோ ரயில்களில் நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *