செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு

Makkal Kural Official

சென்னை, நவ. 11–

2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் பெறுவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் நேரடியாக வழங்கியுள்ளனர்.

மனுவில் 10 விருப்ப சின்னங்களின் பட்டியலை தவெக சமர்ப்பித்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதால், பொது சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மனுவில் தவெக தெரிவித்துள்ளது.

சின்ன ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவு டிசம்பர் 2025 இறுதிக்குள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *