புதுடெல்லி, டிச. 13–
கடந்த 2001–ம் ஆண்டு பார்லிமெண்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு, இன்று பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13–ந்தேதி பார்லிமெண்ட் வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அந்த சதி திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 8 பேர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களது நினைவாக, டிசம்பர் 13ம் தேதி ஆண்டுதோறும் பார்லிமெண்ட் வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டும் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல், சோனியா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இது குறித்து பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,
பார்லிமெண்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்துகிறோம். ஜனநாயகத்தை காப்பாற்ற துணிச்சலாக செயல்பட்டு உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படையினரை நாம் ஒருபோதும் மறக்க முடியாது, என்றார்.
இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ”பார்லிமெண்ட் மீது கோழைத்தனமான தாக்குதலில் கேடயமாக நின்ற துணிச்சலான பாதுகாப்பு படையினரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். தங்கள் உயிரை பாதுகாப்பு படையினர் தியாகம் செய்தது என்றும் நிலைத்திருக்கும். அவர்களது தியாகம், இந்தியாவின் வலிமையையும், உறுதியையும் ஊக்குவிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
![]()





