ராணிப்பேட்டை, டிச. 22:
தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் திமிரி வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்திட ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் பின்தங்கிய தொகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திமிரி வட்டாரம் காவனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3.5 இலட்சம் வீதம் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை வழங்கினார்.
திமிரிலிருந்து பாலமதி வரை செல்லும் ஊர்களில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்து வருவதால் இப்பகுதி கிராம மக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆட்டோக்கள் உதவியாக இருக்கும் மகளிர் குழுக்கள் இதனை முழுமையாக நிர்வாகித்து பயன்பெறுவார்கள்.
இதன் மூலம் சந்தைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுடன் கிராமங்களை இணைப்பதோடு, பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கப்படுகிறது. இவ்வாகனங்கள் ஊரக போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தவும், பெண்கள் தலைமையிலான வாழ்வாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் (பொது) இராஜராஜன், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், கண்காணிப்பாளர் கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





