சென்னை, நவ.11–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-–வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். காங்கேயன் காளைகள் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. காங்கேயன் இன காளைகள் அவற்றின் வேகம் மற்றும் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை.
மேலும், இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து வழியனுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பேசியதாவது:–
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் இன்னொரு மைல்கல்லாக, சாதனையாக ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை 2025ஐ முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்த இருக்கின்றோம். இந்தப் போட்டிகள் வருகின்ற 28ந் தேதி முதல் டிசம்பர் 10ந் தேதி வரை நடக்க இருக்கின்றது. அதற்கான டிராபி பயணத்தையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை, நமது நிர்வாகத் தலைநகரான சென்னையில் மட்டுமல்ல, நமது கலாச்சாரத் தலைநகரான மதுரையிலும் நடைபெறும்.
11,000 வீரர்கள்
2021 ஆம் ஆண்டில் திராவிட மாடல் அரசாங்கம் பதவியேற்ற போதெல்லாம், சுமார் 3,000 பதிவுசெய்யப்பட்ட ஹாக்கி வீரர்கள் இருந்தனர். தற்போது, முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் எங்கள் துறையின் அயராத முயற்சியின் காரணமாக, இந்த ஆண்டு சுமார் 11,000 வீரர்கள் ஹாக்கி பயிற்சிக்காக சேர்ந்துள்ளனர்.
காங்கேயன் நமது ஹாக்கி வீரர்களின் சுறுசுறுப்பு மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையைக் குறிக்கிறது. இந்த பிரமாண்டமான சுற்றுப்பயணத்தைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் சென்னை மற்றும் மதுரைக்கு வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
சேகர்பாபு, மேயர் பிரியா
இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் டத்தோ தயாப் இக்ரம், இந்திய ஹாக்கி சங்க செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் ஜெ.மனோகரன், இயக்குநர் (பொது) கமாண்டர் ஆர்.கே. ஸ்ரீவத்சவா உள்பட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





