கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ
திருச்சி, ஜூலை 12–
12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை.மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார். தி.மு.க.வில் தற்போது சேர்க்கப்பட்டவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும் 11 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
அங்கீகாரம் பெறுவது
முக்கியம்
ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம். அதற்கு குறைந்தபட்சம் 10, 12 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும். இதுதான் எங்களது கட்சியினர் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை. கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டிலும் ஆட்சியை தொடர்ந்து நடத்துவார். தி.மு.க. அறுதி பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சு எழாது. தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





