ஆவடி, ஜூலை 31–
தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்த போது அவரிடம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அபுல் காசிம் (40) என்பவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 12 கிலோ கஞ்சாவை திரிபுரா மாநிலம் அகர்தலா இரயில் நிலையம் சென்று வாங்கி வந்து அண்ணனூர், திருமுல்லைவாயில், அம்பத்தூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
12 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய அம்பத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரை கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.
![]()





