சென்னை, ஆக. 23–
பீகார் மாநிலம் ராஜ்கிரில் 29–ந் தேதி முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ள “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
“ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் 8 ஆசிய நாடுகள் மோதுகின்றன, இப்போட்டியில் இந்திய அணி, மலேஷியா, ஜப்பான், சீனா மற்றும் கஜகஸ்தான் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. கொரியா, வங்கதேசம் மற்றும் சீன, தைபே அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதில் ஆசிய பட்டம் வெல்லும் அணி 2026–ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.
தமிழ்நாடு ஹாக்கி யூனிட் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் ‘’ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025″ யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று அறிமுகப்படுத்தி, ‘’பாஸ் தி பால் டிராபி சுற்றுப்பயணத்தை’’ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பொதுமக்களின் பார்வைக்காக ‘’ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை” பயணம் செய்ய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் பொருளாளர் கே. ராஜராஜன், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் இணை செயலாளர் டி. கிளெமென்ட் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
![]()





