மலகா, ஜன. 19:
ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவிரைவு ரெயில் மற்றொரு ரெயில் மீது மோதியதில் 21 பேர் பலியானார்கள்.
ஸ்பெயினின் மலகாவில் இருந்து மேட்ரிட்டுக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரெயில் அடாமுஸ் அருகே தடம்புரண்டு எதிரே வந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பெட்டிகள் தடம்புரண்டதை அடுத்து, பலரும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியேறினர். இந்த ரயில் விபத்து ஸ்பெயினை உலுக்கி உள்ளது. தடம்புரண்ட முதல் ரெயிலில் பயணம் செய்தவர் கூறுகையில், “இது ஒரு திகில் படம் போல இருந்தது ” என்றார்.
விபத்தைத் தொடர்ந்து மேட்ரிட் மற்றும் அண்டலுசியா இடையிலான ரெயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவ மேட்ரிட், செவில்லி, கோர்டோபா, மலகா மற்றும் ஹுவெல்வா ஆகிய ரெயில் நிலையங்களில் பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அடிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு சுமார் 40 அவசரகால ராணுவப் படை வீரர்களையும், 15 வாகனங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறியுள்ளார்.
![]()





