நெல்லை, ஆக. 23–
அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெல்லையில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விவசாயத்தில் மட்டும்தான் வேரோடு அகற்ற முடியும்; எங்களை எதுவும் செய்ய முடியாது. வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது; 15 ஆண்டுகளாக அந்த வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். பா.ஜ.க.வால் ஒன்றும் செய்ய முடியாது; தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தான். தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது. பா.ஜ.க.வினர் ஆசை ஒருபோதும் நிறைவேறாது; அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது.
தி.மு.க.விற்கு
போட்டியே கிடையாது
தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது. தொடர்ந்து தி.மு.க வெற்றி பெறும். இதே தொகுதியில் (நெல்லை) நாங்கள் வென்று காட்டுவோம். அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி; அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிடுவோம் என கூறி வருகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் இருகட்சியை சேர்ந்த தொண்டர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். முதலமைச்சரை யார் என்ன புனைப்பெயர் வைத்து அழைத்தாலும்.. அவர்தான் (மு.க.ஸ்டாலின்) தமிழகத்தின் முதலமைச்சர். மக்களின் பெரும் ஆதரவால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.
![]()





