சென்னை, ஜன.19-
வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயன் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாயை அமைத்தார். இந்த கால்வாய் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி, ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது.
அவர் அமைத்த காலிங்கராயன் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்தநிலையில் காலிங்கராயனுக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அந்த பணிகள் வேகமாக நடந்து வந்தது. இந்தநிலையில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலையை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வெள்ளோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), மாநகராட்சி மேயர் நாகரத்தினம், தி.மு.க. நிர்வாகிகள், காலிங்கராயன் வாரிசுதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி காலிங்கராயன் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காலிங்கராயன் சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயன் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்கு பெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகம் காலிங்கராயன் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடை யே, முதலமைச்சர் எக்ஸ் வலைத் தளத்தில், ‘மேற்கு மண்டலம் வளம் பெற பவானியையும், நொய்யலையும் இணைத்த நதிநீர் இணைப்பின் முன்னோடியான காலிங்கராயன் சிலையை திறந்து வைத்தேன்’ என்று கூறியுள்ளார்.
![]()





