விழுப்புரம், டிச.16:
வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள், ஆண்டுக்கடன் திட்டத்தின் கீழ் வேளாண் பயிர்க்கடன், சிறு, குறு தொழில் கடன், கல்விக்கடன் போன்ற முன்னுரிமை கடன் திட்டங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு எட்டப்பட்டுள்ள நிலை குறித்தும் கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்டவற்றால் மானியத்துடன் கூடிய கடனுதவி கோரி பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளில் நிலுவையில் இருப்பதை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழான கடனுதவிகள் வேலைவாய்ப்பினை தீர்ப்பதிலும் பிராந்திய பொருளாதார மேம்பாட்டிலும் வகிக்கும் பங்கு அவற்றின் மீது நேர்மறையான முடிவுகள் எடுப்பது குறித்தும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்விக்கடன் வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி கடன் விரைந்து வழங்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் இணை இயக்குனர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





