தூத்துக்குடி, ஜூலை 23–-
அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26–ந்தேதி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரம் நேற்று அதிகாரப் பூர்வமாக வெளி யிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-–
வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பிரதமர் மோடி மாலத்தீவு தலைநகரம் மாலே விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் புறப்படுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அந்த விமானம் இரவு 7.50 மணிக்கு தரை இறங்குகிறது. விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை நடந்து சென்று பார்வையிடுகிறார். இரவு 8.15 மணியளவில் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களை தொடங்கி வைத்தும் பேசுகிறார்.
இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் திருச்சிக்கு புறப்படுகிறார். அந்த விமானம் இரவு 10.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்குகிறது. திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்த பின்னர் இரவில் தங்கும் இடத்திற்கு கார் மூலம் செல்கிறார்.
27-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 11.10 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து எம்.ஐ. 17 ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு புறப்படுகிறார். கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்குகிறது. அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு காரில் செல்கிறார்.
இதனைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா மற்றும் சைவ சித்தாந்த விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிபேடு தளத்திற்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். இதனை தொடர்ந்து 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
![]()





