செய்திகள்

விண்ணப்பித்த அன்றே விவசாய பயிர்க்கடன் வழங்கும் முன்னோடி திட்டம்

Makkal Kural Official

தர்மபுரி, ஆக.17–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும்.

2025–-26–ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறுவதற்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இணையவழியில் பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

மேற்கண்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக முதற்கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டம் முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ, இணைய வழியிலோ தங்களது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணைக் கொண்டு பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் மிக எளிமையான முறை உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நில உடைமை தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையிடம் இருந்தும் பயிர்சாகுபடி தொடர்பான விவரங்கள் வேளாண் துறையிடம் இருந்தும் இணைய வழியில் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து, சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு இணைய வழியில் அனுப்பப்படும்.

சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் தங்கள் கணினி வழியே விவசாயிகள் குறித்த விவரங்களை சரிபார்த்து கடன் தொகையை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பர்.

வட்டியில்லா விவசாய கடன்

இத்திட்டத்தை துவக்கி வைப்பதன் அடையாளமாக இன்று தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் பாலஜங்கமனஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தைச் சார்ந்த 5 விவசாயிகளுக்கு முதல்வரால் வட்டியில்லாத விவசாயக்கடன் வழங்கப்பட்டது.

இத்திட்டம் நடப்பாண்டிலேயே விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இணையவழியில் கடன் பெறும் இத்திட்டம் படிப்படியாக சுயஉதவிக் குழுக்களுக்கான கடன், சிறு, குறு வணிகக்கடன் என பிற வகைக் கடன்களையும் இணைய வழியிலேயே விண்ணப்பித்துப் பெறுமளவிற்கு நடப்பாண்டிலேயே விரிவுபடுத்தப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் 1989–ம் ஆண்டு தருமபுரியில், கருணாநிதியால் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.7.2023 அன்று தொடங்கி வைத்தார்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் 1908–ம் ஆண்டு தொடங்கப்பட்டு 117 வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, இன்றையதினம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு தொடங்கி வைக்கப்பட்டது சிறப்புக்குரியது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேஆர்.பெரியகருப்பன், ஆர். ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேசன், கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் க.நந்தகுமார், மாவட்ட கலெக்டர் சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்றும் அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *