சென்னை, நவ.20:
சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான விஎஸ் ஹாஸ்பிட்டல்ஸ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மருத்துவமனையில் VELYS எனும் ரோபோ உதவியுடன் செயல்படும் நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மிகத் துல்லியமாகவும், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையிலும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகும். இந்த மேம்பட்ட சிகிச்சை செயல்முறையின் அறிமுகத்தை முன்னிட்டு, இம்மாத இறுதி வரை இலவச எலும்பியல் மருத்துவ ஆலோசனைகளை இம்மருத்துவமனை வழங்குகிறது.
இந்த நவீன சிகிச்சை மையத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். சுந்தர், முதுநிலை மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் எஸ்.சுப்பிரமணியன், நிர்வாக இயக்குநர் முத்து சுப்பிரமணியன், குழும தலைமை இயக்க அதிகாரி பிரசன்னா சீனிவாசன் மற்றும் நிதித்துறை இயக்குநர் எஸ். ராமு மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேராசிரியர் டாக்டர் சுந்தர் பேசுகையில்,
முழங்கால் மாற்று சிகிச்சையில் ஒரு புரட்சிகரமான மேம்பாடான இத்தொழில்நுட்பம், அறுவை சிகிச்சையின் போது நேரடித் தகவல்களை உடனுக்குடன் வழங்குவதோடு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய ‘சி.டி. ஸ்கேன்’ பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தேவையற்றதாக்கி விடுகிறது. மேலும், செயற்கை மூட்டுகளை மிகத் துல்லியமாகப் பொருத்த இது உதவுகிறது.
இந்த ரோபோட்டிக் அமைப்பு, நோயாளியின் முழங்கால் அமைப்பு மற்றும் மென்திசுக்களின் சமநிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குவதால், அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் மருத்துவர்களால் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





