சென்னை, நவ. 21–
ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் “எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இங்குள்ள உணவகத்தில் தீபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது எக்ஸ்பிரஸ் மாலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கடந்த 2 மாதம் முன்பு, செப்டம்பர் மாதம் 23 ந்தேதி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் 4வது ஸ்கிரீனில், லிப்ட் விபத்தில் என்ஜினியர் ராஜேஷ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லிப்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். தீவிபத்து காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் மாலுக்கு சென்றவர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தேசம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறுவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





