Uncategorized

ராணிப்பேட்டையில் 28–ந் தேதி முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள்: அமைச்சர் காந்தி ஆய்வு

Makkal Kural Official

ராணிப்பேட்டை, ஜன. 14–

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் 28–ந் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை கட்டுவதற்கான முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அமைந்திட தமிழ்நாடு அரசின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலை அமைவதற்கான 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, அவ்விடம் டாடா மோடார்ஸ் நிறுவனம் அமைவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாடா மோடார்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் 28–ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வருகை தந்து டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆர். காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிப்காட் நுழைவுவாயில் முதல் டாடா தொழில் நிறுவனம் அமைய உள்ள இடம் வரையில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக சாலை பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை பணிகள் விரைவாக ஏற்படுத்த கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்தும், முக்கிய பிரமுகர்கள் வருகை, வாகனம் நிறுத்தும் இடம் போன்ற அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, முதலில் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் துறையும் இணைந்து விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, டாடா நிறுவன பொது மேலாளர் முத்துக்குமார், சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவபிரகாசம், உதவி பொது மேலாளர் அருண்குமார், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வகுமார், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *