தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்
புதுடெல்லி, ஜூலை 25–
கமல்ஹாசன் உள்பட 4 பேர் ராஜ்ய சபை எம்.பி.யாக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க., அண்ணா தி.மு.க. சார்பில் முன்னுறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தோ்வாகினர். இதில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், எம்.பி.யாக பதவியேற்க கமல்ஹாசன் நேற்று சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. ராஜ்யசபை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்க அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து கமல்ஹாசன் எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராஜ்யசபை தலைவர் ஹர்வன்ஷ் பதவி பிரமானம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து தி.மு.க.வின் பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
அண்ணா தி.மு.க.வின் இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. தனபால் ஆகிய இருவரும் வருகிற 28–ந்தேதி பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது.
எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் உட்பட 4 பேருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்தது தெரிவித்துள்ளார்.
![]()





