செய்திகள்

ராஜஸ்தானி-தமிழ் சேவை விருது

Makkal Kural Official

சென்னை, நவ. 13-

வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழங்கப்படும் ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராஜஸ்தானி அசோசியேசன்-தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, அதன் மதிப்புமிக்க ‘ராஜஸ்தானி–தமிழ் சேவா விருதுகள் 2026’ இன் 2வது பதிப்பை பெருமையுடன் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காகத் தனித்துவமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ஒரு முயற்சியே இந்த விருதுகள். சென்னை, நவம்பர் 12, 2025 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

8 பிரிவுகளின் கீழ் விருதுகள்:

வேளாண்மை & கிராமப்புற மேம்பாடு, கலை & கலாச்சாரம், கல்வி & சுகாதாரம், தொழில்முனைவு & தொழில், சுற்றுச்சூழல் & நிலைத்தன்மை, ஊடகம் & தொடர்பு, பொது சேவை & நிர்வாகம், மற்றும் சமூக நலன் ஆகிய 8 பிரிவுகளில் வழங்கப்பட உள்ள ஒவ்வொரு விருதும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன், ஒரு கோப்பை மற்றும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை நவம்பர் 12, 2025 முதல் டிசம்பர் 5, 2025 வரை www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சாதி, மதம் அல்லது பின்னணியைப் பாகுபாடு இன்றி பொது, தனியார் அல்லது தன்னார்வத் துறைகளைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விருதாளர்கள் தேர்வானது, தாக்கத்தை ஏற்படுத்திய சேவை, நேர்மை மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும்.

தேர்வுக் குழு

இறுதித் தேர்வுக்கான நடுவர் குழுவில் எஸ்.குருமூர்த்தி (தலைமை தொகுப்பாசிரியர் – துக்ளக்), இந்துக் குழும மூத்த பத்திரிகையாளர் என். ரவி, பரதநாட்டிய அறிஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.பாலகுருசாமி, பகவான் மகாவீர் விருதுகள் நிறுவனர் என்.சுகல்சந்த் ஜெயின், ராஜஸ்தானி அசோசியேசன் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விருதுக்கான தேர்வில், நடுவர் மன்றத்தின் முடிவே இறுதியானது என்றும், தேர்வில் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் ராஜஸ்தானி அசோசியேசன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விருது வழங்கும் விழா பிப்ரவரி 1, 2026 அன்று சென்னையில் நடைபெறும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுபெறுபவர்களின் விவரங்கள் www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஸ்தானி அசோசியேசன், தமிழ்நாடு 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரான அறிஞர் அண்ணாவால் தொடங்கி வைக்கப்பட்டு, சமூக சேவை, கலாச்சார மேம்பாடு, சமூக நலனில் முன்னோடி அமைப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாணவர்களுக்கு கோடிக்கணக்கிலான ரூபாய் உதவித்தொகையும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ, புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் உள்ளிட்டு ஏராளமான பணிகளையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *