புதுடெல்லி, அக். 16–
‘‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளது.
“இந்தியா பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்களின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்களின் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தில் முழுமையாக வழி நடத்தப்படுகின்றன” என்று அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டைக் குறிக்கோள்களில் நிலையான எரிசக்தி விலை, இரண்டு – பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது என்பதை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துமாறு அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். இது தொடர்பாக, டிரம்ப்பின் பேட்டி குறித்து வெளியுறவுத் துறை அளித்த பதிலில், “அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக நாங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது என்று அமைச்சகம்தெரிவித்தது.
டிரம்ப் பேட்டி
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என்று மோடி தனக்கு உறுதியளித்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தார். சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன் என்றும் கூறியிருந்தார்.
![]()





