மாஸ்கோ, அக். 24–
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக பொருளாதார தடைகளை விதித்துள்ளார். ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் புதின் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் டிரம்பின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று கூறிய புதின் அவரது பொருளாதார தடைகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் பேசி வருகிறார். அதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து வருகிறது. இதனால் கோபமான டிரம்ப், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இப்போது கச்சா எண்ணெய் தொழிலை குறிவைத்து முடக்க டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளார். இந்த 2 நிறுவனங்களும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் துறையில் கொடி கட்டி பறக்கிறது. வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. இதனை தடுக்கும் நோக்கில் டிரம்ப் இந்த பொருளாதார தடைகளை விதித்துள்ளார். இந்த பொருளாதார தடையால் ரஷ்ய அதிபர் புதின் கடும் கோபமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக புதின் கூறியதாவது: ரஷ்யா எல்லை மற்றும் ரஷ்யாவுக்குள் நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் மிகவும் தீவிரமான அதேவேளையில் உறுதியான பதிலடி கொடுக்கப்படும். ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் இருநாடுகளின் உறவுகளை ஒருபோதும் வலுப்படுத்தாது. உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிரான செயலாக தான் பொருளாதார தடைகள் இருக்கும். இது ஏற்க முடியாத செயல். நட்பற்ற முறையிலான செயலாக இதனை பார்க்கிறேன்.
அடிபணிய மாட்டோம்
இருப்பினும் இத்தகைய தடைகள் என்பது எங்களின் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிக்காது. ஏனென்றால் ரஷ்யாவின் எரிசக்தி துறை மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இத்தகைய செயல் ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுயமரியாதை கொண்ட எந்த நாடும், சுயமரியாதை கொண்ட எந்த மக்களும் அழுத்தத்துக்கு அடிபணியமாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா அல்லது வேறு எந்த நாடுகளின் அழுத்தத்துக்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது ” என்றார்.
இந்த போரை நிறுத்துவதில் இழுபறி நிலவுகிறது. இதனால் கோபமான டிரம்ப் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அதேபோல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவையும் குறிவைத்து வரி போட தயாராகி வருகிறார். இருப்பினும் நம் நாடும், சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது.
இதனால் தான் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்துள்ளார். கச்சா எண்ணெய் துறையை முடக்கினால் போர் முடிவுக்கு வரும் என்று நினைத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் தான் டிரம்ப் கொடுக்கும் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
![]()





