மாஸ்கோ, ஜூலை 24–
ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற ஏ.என்.24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமாகி உள்ளது. விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்துள்ளனர், விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷியாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற பகுதிக்கு மேலே பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்து மாயமானது. டிண்டா விமான நிலையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாயமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த 49 பேரின் கதி என்ன? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
![]()





