சென்னை, ஜூலை 30–
மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புகையிலையை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.
மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால், இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சீரற்ற உடல் சோதனைகளை மேற்கொள்ளும். நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,
அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ இரயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரயில் நிலையங்களிலும் மெட்ரோ இரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு மெட்ரோ ரெயில்வே சட்டம் 2002 மற்றும் டிக்கெட் சட்டம் 2014 ஆகியவற்றின் படி அபராதம் விதிக்கப்படும்.
சுத்தமான, பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் அனைத்து பயணிகளும் ஒத்துழைக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. நமது மெட்ரோ அமைப்பை புகையிலை இல்லாததாகவும், அனைவருக்கும் உகந்ததாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()





