சென்னை, ஆக. 1–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
‘‘முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மு.க.முத்து மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன்.
நெல்லை கடேிசி நகரில் என்ஜினியரிங் கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். காவல்துறை என்ன தான் உடனுக்குடன் கைது நடவடிக்கை எடுத்தாலும், ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. இது குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவார கால சிகிச்சை முடிந்து மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி வீடு திரும்பினார். 3 நாட்கள் ஓய்வுக்குப்பின் அவர் நேற்று தலைமை செயலகம் வந்து வழக்கமான பணிகளை தொடங்கினார். இதனிடையே மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரேமலதா விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலினை வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர்
![]()





