செய்திகள்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

சென்னை, அக். 3–

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள், விமான நிலையங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள், முக்கியமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடு ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை டிஜிபி அலுவலக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலைக் காவல்துறையினர் திறந்து பார்த்துள்ளனர். அதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகொண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர்.

இதே போல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மற்றொரு மின்னஞ்சலில் கவர்னர் மாளிகை, தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகம், எஸ். வி. சேகர் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் அந்த இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது.

இதேபோன்று, சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.

இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் டார்க் வெப் மூலம் வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால், இந்தச் செயலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கைது செய்வதில் போலீஸாருக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை வைத்து அதை அனுப்பிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *