செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி சங்கத்தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைப்பேன்

Makkal Kural Official

இசையமைப்பாளர் இளையராஜா உறுதி

சென்னை, செப்.15-

சிம்பொனி இசைத்து உலக சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சென்னையில் பாராட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் சிம்பொனி அரங்கேற்றி அசத்திய இளையராஜா குறைவான நேரத்தில் தனது உரையை பேசி முடித்துவிட்டார்.

இதுகுறித்து இளையராஜா நேற்று வீடியோ பதிவில் விளக்கம் அளித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:-–

தமிழக அரசு எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக எனக்கு பேச்சு வரவில்லை. இந்த பாராட்டு விழாவை இவ்வளவு அழகாக அரசு நடத்தியதை என்னால் நம்பவே முடியவில்லை. ‘எதுக்காக இதை செய்கிறீர்கள்?’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நானே கேட்டேன். பலரும் பலவிதமாக நினைக்கலாம். நான் போட்ட இசை தான் காரணமா? என்பதை அவர் தான் சொல்லமுடியும். இதையெல்லாம் நான் எதிர்பார்க்கிறவன் அல்ல. அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள். சிம்பொனி இசைத்து உலக சாதனை படைத்த ஒரு தமிழனை பாராட்டுவது அரசின் கடமை என்று அவர் கருதியுள்ளார். ‘சங்கத்தமிழ் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும். உங்களை தவிர வேறு யாரும் அதை செய்யமுடியாது’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் சொன்னது, எனக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. அவரது வேண்டுகோளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். விழாவில் குறைவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் வந்திருந்தது விழாவுக்கு மகுடம் வைத்தது போலிருந்தது. விழாவுக்கு வந்தவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்றும், எனது 50 ஆண்டு திரைப்பயணம் எப்படி இருந்தது? என்றும், அதில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதையும் சொல்லாதது ஒரு சிறிய விஷயமாக எனக்கு பட்டது.

தமிழக மக்களுக்காக விரைவில் சிம்பொனியை நடத்துவேன். அது நிச்சயம் நடக்கும். மக்கள் அந்த நாளை எதிர்பார்க்கலாம். நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *