சென்னை, ஜூலை 30–
ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
கடந்த 26–ந்தேதி தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார். தொடர்ந்து மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருகை தருகிறார். வருகிற ஆகஸ்டு 26-ந்தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஆன்மீக தலங்களில் முக்கியத்துவம் பெற்ற திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோவில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
ஒரு மாத இடைவெளியில் 2வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதனிடையே செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
![]()





