ராணிப்பேட்டை, நவ. 18–
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 375 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.36 இலட்சம் மதிப்பீட்டிலான செயற்கை கால் அவயங்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யா தேவி, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





