சென்னை, ஜூலை 16–
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.
இந்தத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை மு.க.ஸ்டாலின் கடந்த 3ந் தேதி அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
தொடர்ந்து, கடந்த 10ந் தேதி அன்று திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதலமைச்சர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார்.
மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 12ந் தேதி அன்று முதலமைச்சர் திறந்து வைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இணைக்கப்பட்ட மக்களின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மன்னம்பந்தல் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.
இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட செயலாளர் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ., மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா, மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகமணி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த முன்னெடுப்பு திட்டத்தில் இதுவரை 1 கோடியே 35 லட்சத்து 43 ஆயிரத்து 103 நபர்கள் இணைந்துள்ளனர்.
![]()





