சென்னை, ஜூலை 13–
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் மதுரவாயல் பகுதியில் போதைப் பொருட்கள் வைத்திருந்த 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் கண்காணிப்பில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் சென்னை பெருநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, இது தொடர்பான குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.
மேலும் நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு தனிப்படையினர் ஒருங்கிணைந்து போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினர் மற்றும் மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து, மதுரவாயல், காமாட்சி நகர் 2வது மெயின் ரோட்டில் கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருந்த வசந்த் (23), கார்த்திக் (27), ஆகாஷ் (24), கௌதம் (28), ராஜ்குமார் (27), தினேஷ்குமார் (24), பவேஷ் (21), திவாகர் (27), ரூபன் (26), அருண் பரிஷித் (27) ஆகிய 10 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 0.81 கிராம் எல்எஸ்டி ஸ்டாம்புகள், 5.25 கிராம் எம்டிஎம்ஏ மாத்திரைகள், 53 கிராம் ஓஜி கஞ்சா, 350 கிராம் கஞ்சா, ரூ.50 ஆயிரம் மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கார்த்திக் மற்றும் ஆகாஷ் மீது ஏற்கனவே ஒரு போதைப்பொருள் வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 10 பேரும், விசாரணைக்குப் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
![]()





