புதுடெல்லி, ஜன. 26–
டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
போரின்போது நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர்.
போர் வீரர்களின் நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
குடியரசு தின விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் மரியாதை, பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த மகத்தான தேசிய விழா, உங்கள் வாழ்வில் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் புகுத்தட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும். இதுவே எனது இதயப்பூர்வமான விருப்பம்’’ என்று கூறியுள்ளார்.
![]()





