செய்திகள்

போர் முடிவுக்குப் பிறகு பதவி விலகுவேன்: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

Makkal Kural Official

கிவி, செப். 27–

ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

கடந்த 2019ல் உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜெலென்ஸ்கி. 2024 பிப்ரவரி மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி கூறியதாவது:–

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே முதல் இலக்கு. போர் முடிவுக்கு வந்த பிறகு நான் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன். அதன்பிறகு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஏனெனில் தேர்தல் என்பது என்னுடைய இலக்கு அல்ல. மக்களுடன் துணை நிற்பதே என்னுடைய குறிக்கோள். போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு துணையாக நிற்க விரும்புகிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனில் தேர்தலை நடத்த கோருவேன். அப்போது தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்றார்.

மேலும், போருக்காக அமெரிக்காவிடமிருந்து சக்திமிக்க ஆயுதங்களை கோரியுள்ளோம். ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால் கிரெம்பிளினில் பணிபுரியும் ரஷ்ய அதிகாரிகள், தங்கள் அலுவலகத்துக்கு அருகில் பாதுகாப்பு இடம் எங்கே இருக்கிறது என தேட வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ‘இதைவிட பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். பாதுகாப்பு இடங்களில் கூட தங்க முடியாது. இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *