ஒசூர், அக். 12–
ஒசூர் அருகே பெங்களூரு -– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூர் –- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அருகே இன்று அதிகாலை 4 மணிக்கு மினி லாரி, கார் மற்றொரு லாரி ஒன்றன்பின் ஒன்றாக பின் தொடர்ந்து சென்றது. அப்போது திடீரென முன்னாள் சென்ற மினி லாரி மீது கார் மோதியது. இதைத் தொடர்ந்து பின்னால் வந்த 4 வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன் (வயது 30). இவர் யுபிஎஸ்சி தேர்வுக்காக பெங்களூரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் மணிவண்ணன் என்பவர் கனடா நாட்டில் இருந்து பெங்களூரு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிவண்ணனை முகிலன் மற்றும் அவரது நண்பர்கள் அழைத்துச் வர சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. உடனடியாக போலீஸார் அடிபட்ட வாகனங்களை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





