செய்திகள்

புஸ்சி ஆனந்த் முன்ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மனு

Makkal Kural Official

மதுரை, அக். 11–

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே மதியழகன் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர். இதனால் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் 2-வது முறையாக புஸ்சி ஆனந்த், தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், கரூரில் எங்கள் கட்சி கூட்டத்தின்போது போலீசாரின் அலட்சியம்தான் பலர் இறப்பதற்கு காரணம். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாலும், விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஏற்கனவே என்னுடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது.

ஆனால் இப்போது அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சையில் இல்லை. மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை எனக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *