புதுடெல்லி, ஆக. 11–
2026–27ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ. அறிமுகம் செய்கிறது.
மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்து இருந்தது.
இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ. அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வரும் 2026–27ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு, இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2023ம் ஆண்டு முதல் சோதனை முறையில் பொதுத்தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகளை 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, புத்தகம் பார்த்து எழுதும் முறை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





