முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
டெல்லி, ஜூலை 23–
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரிட்டன் செல்லும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் இங்கிலாந்துக்கு (ஜூலை 23 முதல் 24 வரை) அதிகாரப்பூர்வ பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தில், அவர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தியா-பிரிட்டன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) முறையாக கையெழுத்திடுவது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
என்ன ஒப்பந்தங்கள்
இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரிட்டன் இரண்டிற்கும் ஒரு திருப்புமுனையாக அமையும். இந்த ஒப்பந்தம் மே மாதம் இறுதியாக்கப்பட்டது. இந்தியாவின் ஜவுளி, தோல் மற்றும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், பிரிட்டிஷ் விஸ்கி, ஆட்டோமொபைல் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி குறைப்புகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவர் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்து, வணிகத் தலைவர்களுடன் உரையாடவும் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணம் இந்தியா-பிரிட்டன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 25 முதல் 26 வரை மாலத்தீவிற்கு அவர் பயணம் மேற்கொள்வார். அங்கு அந்நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் “கௌரவ விருந்தினராக” பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
![]()





