செய்திகள்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்

Makkal Kural Official

140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என பெருமிதம்

அடிஸ் அபாபா, டிச. 17–

எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு அடிஸ் அபாபா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் பிரதமர் மோடியும், எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன. நம்முடைய இரு நாடுகளின் ஒத்துழைப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் விரிவாக கலந்து ஆலோசனை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம். இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று மோடி கூறினார்.

28வது உயரிய விருது

பின்னர், பிரதமர் மோடிக்கு ‘எதியோப்பியான் தி கிரேட் ஹானர் நிஷான்’ என்ற உயரிய விருது வழங்கி அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி கவுரவித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.

விருது பெற்ற பிறகு மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிக உயரிய விருதான – எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் எத்தியோப்பியாவுக்கு வந்தவுடன், இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும், பாசத்தையும் வழங்கினர். பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

140 கோடி இந்தியர்களுக்கு…

எத்தியோப்பியாவின் கவுரவ விருதைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். அதை 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.‘வந்தே மாதரம்’ பாடல்:

மோடி கைத் தட்டி உற்சாகம்

எத்தியோப்பியா சென்ற மோடியை கவுரவிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி அளித்த இரவு விருந்தின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது. எத்தியோப்பியா பாடகர்கள் பாட ஆரம்பித்ததும் பிரதமர் மோடி கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பாடலை அவர் கேட்டு ரசித்தார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”பிரதமர் அபி அகமது அலி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில், எத்தியோப்பிய பாடகர்களால் அற்புதமான வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *