செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பெண்கள் பலி

Makkal Kural Official

தொண்டி, ஜூலை 24–

தொண்டி அருகே இன்று அதிகாலை பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் பலியானார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தலமான வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் ஒரு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருப்பாலைக்குடிக்கும் உப்பூருக்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது அதிகாலை 4.30 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் கூட்டத்தில் புகுந்தது.

இதில் முனியசாமி மனைவி சாந்தி (வயது 50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி (40) ஆகிய 2 பெண் பக்தர்களும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

மேலும் இந்த விபத்தில் நாகஜோதி மற்றும் சிலர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.ஆடி அமாவாசையை முன்னிட்டு பாதயாத்திரையாக சென்ற 2 பெண் பக்தர்கள் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *