கராச்சி, ஜன. 19:
பாகிஸ்தான் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடைகள் தரை தளத்தில் உள்ளன.
இந்நிலையில் நேற்று தினம் இரவு திடீரென இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தரை தளத்தில் உள்ள கடைகளில் தீ பிடித்து கொண்டது. அதன்பின்னர் கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல கடைகளுக்கும் பரவியுள்ளது.
இதனால் மீட்பு குழுவாலும் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் தீ அணைக்கப்பட்ட பின்னர், உள்ளே சென்றனர் என டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 8 உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. தீவிர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பிடித்து, கரும்புகை பரவி அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டனர்.எனினும் 70 பேர் இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
வணிக வளாகத்தின் அனைத்து தளத்திலும் சேர்த்து மொத்தம் 1,200 கடைகள் உள்ளது. இது பழைய கட்டிடம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
![]()





