செய்திகள்

‘‘பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’’: டிரம்ப் தகவல்

Makkal Kural Official


வாஷிங்டன், ஜூலை 31–

‘‘பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

‘‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே மற்றொரு அறிவிப்பையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

“பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பாகிஸ்தானில் மேம்படுத்தப் போகிறோம். இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமெரிக்காவை அடிப்படையில் எதிர்க்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. டாலர் மீதான தாக்குதலை நடத்த யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. பிரதமர் மோடி என்னுடைய நண்பர், ஆனால் வணிக ரீதியில் அவர்கள் அமெரிக்காவுடன் அதிகளவில் வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய விற்கிறார்கள். ஆனால், நாங்கள் வாங்க விரும்பவில்லை என்றார்’’. ஏனெனில் அதிக வரி விதிக்கப்படுகிறது. உலகில் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. தற்போது, வரியைக் கணிசமாகக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். ஒப்பந்தம் நிறைவு பெறுமா அல்லது அதிக வரி விதிக்கப்படுமா என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்” எனவு குறிப்பிட்டுள்ளார்.

20 நிறுவனங்களுக்கு தடை

இதனிடையே ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி முதல் 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஈரானுடன் இந்தியாவின் காஞ்சன் பாலிமர்ஸ் நிறுவனம் 13 லட்சம் டாலர், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 8.4 கோடி டாலர், ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட் கோ நிறுவனம் 2.2 கோடி டாலர், ஜூபிடர் டை கெமிகல் பிரைவெட் லிமிடெட் 4.9 கோடி டாலர் வர்த்தகம் செய்துள்ளது.அதேபோல், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக தடை விதிக்கப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *