செய்திகள்

நேபாளம், மாலத்தீவு, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Makkal Kural Official

தியான்ஜின், செப்.1-

ஷாங்காய் மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது.

மாநாட்டு அரங்குக்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்றார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் கியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவையும் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த ஜூலை மாத இறுதியில் மாலத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் முகமது முய்சுவை அவர் சந்தித்து பேசினார்.

இதைப்போல எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலியை மாநாட்டு அரங்கில் சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்னை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் ஆக்கப்பூர்வமான உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். ராணுவம், வர்த்தகம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வியட்நாமுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அப்போது விருப்பம் தெரிவித்தார்.

இந்தியாவின் முக்கியமான அண்டை நாடான மியான்மரின் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லையிங்கை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை நீட்டிப்பதற்கு வாய்ப்புள்ள துறைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் உள்ளிட்ட தலைவர் களையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *