திருவள்ளூர், டிச. 5:
நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளை கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் வைத்து துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் அடிக்கல் வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சி பகுதியிலுள்ள மேம்பாலம் மீஞ்சூர் -வண்டலூர் ஆகிய பகுதியை இணைக்கும் பிரதான இடமாக திகழ்கிறது. இம்மேம்பாலம் அருகில் நீரூற்றுடன் கூடிய ரவுண்டானா அமைக்கும் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில்மின் விளக்குகள், தாவரங்கள், நீரூற்று , தமிழ் சின்ன சிற்பம் ஆகியவை கிரில் வேலியுடன் அமைக்கப்படவுள்ளது. எனவே, இப்பகுதி அழகுடனும் பொலிவுடனும் இப்பகுதி காணப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் மாரிச்செல்வம், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு (வ.ஊ), அமிழ்தமன்னன் (கி.ஊ), ஆவடி வட்டாட்சியர் கண்ணன், உதவி பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
![]()





