செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள்: 4 ஐ.டி. ஊழியர்கள் உள்பட 7 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, ஜூலை 22–

நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 4 ஐ.டி. ஊழியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக, சூர்யபாரதி, கண்ணன், ராம்குமார் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். விசரணையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பிரதீப், சரவணகுமார், கௌதம்ராஜ், ரவீந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 கிராம் ஓஜி கஞ்சா, 9 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சூர்யபாரதி, கண்ணன், கௌதம் ராஜ் மற்றும் ரவீந்திரன் ஆகிய 4 நபர்களும் மென்பொருள் (ஐ.டி) நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ராம்குமார், பிரதீப் ஆகிய இருவரும் தொழில் செய்து வருவதும் மற்றும் சரவணகுமார் ஓட்டுநர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 7 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *